இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த... மத தெய்வங்கள் எல்லாம் ஒன்றா?

அநேகர் எல்லா கடவுளும் ஒன்றுதான், ஒரே கடவுளைத்தான் எல்லாரும் வணங்குகிறார்கள், "All roads lead to Rome" என்று சொல்கின்றனர். இது தவறு.
"All roads lead to Rome?" என்ற வழக்கச் சொல்லை நாம் இங்கே கொண்டுவருவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதுபோல் ஆகும். ஆஸ்திரேலியாவில் எந்த சாலையில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. இலங்கையில் எந்த வழியில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. உலகில் எத்தனை சாலைகள் கடலில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகள் மலை உச்சியில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகளில் குழிகளும், பள்ளங்களும்? எத்தனை சாலைகள் மூடப்பட்டுள்ளன?

எல்லா கடவுளும் ஒரே கடவுள் அல்ல; ஒவ்வொரு கடவுளுக்கும் வேறுபட்ட குணங்கள், அந்த கடவுள்கள் சொல்லும் வேறுபட்ட கட்டளைகள்/
அறிவுரைகள் என உள்ளன. ஒரு அலுவகத்தில் காணப்படும் ஒவ்வொரு மேலாளர்களின் குணங்கள் மாறுபடுகிறதே. கடவுள்கள் சொல்லும் கட்டளைகள் மாறுபடும்போது அவை எல்லாம் எப்படி ஒரே கடவுள் என்று சொல்லமுடியும்?

எல்லா மதங்களும் நல்லதைத்தானே போதிக்கின்றன? என்று சொல்பவர்கள் அனைவரும் மதங்களில் காணப்படும் பொதுவான நீதி கட்டளைகளைத்தான் (Moral Law) ஒப்பிடுகின்றனர். ஆழமான போதனைகளை மறந்துவிடுகின்றனர். குறிப்பாக:

[அ] உலகம் எப்படி உண்டாயிற்று? (origin of the world, universe)
[ஆ] மனிதன் பூமியில் எப்படி தோன்றினான்? (origin of Human kind)
[இ] பாவ சுபாவங்கள், பாவத்தினின்று விடுதலை பெறுவது எப்படி? (Salvation)
[ஈ] மனிதன் மரித்தபின் எங்கே போகிறான்? (Life after death)
இதுபோன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு மதமும் ஒரு பதில் தருகின்றது.

இந்துமதத்தில் 33 கோடி தேவர்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சக்தியும், குணமும் உண்டு என்று அறிகிறோம்; அழிக்க, காக்க, உண்டாக்க (இம்மூன்றும் திரித்துவம்), செல்வத்துக்கு, அறிவுக்கு, நீதிக்கு....சூரியன், நாகம் என கணக்கில் அடங்கா கடவுள்கள். சிலை வணக்கம் கூடாது என்று பைபிளில் தெளிவாக உள்ளது. சிலையின்றி இந்து மதத்தில் எப்படி? பலிகேட்கும் கடவுள்களும் அவைகளில் அடங்கும். இந்துக்களின் கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்ற நம்பிக்கையும், மறுபிறவி அல்லது மறுஜென்மம், கர்மா போன்ற கொள்கையும் மற்ற சமயங்களில் இல்லை.[1]


இஸ்லாமிய சமயத்தில் கடவுள் ஒருவரே என்றும் நபி முகமதுவை பின்பற்றவேண்டும் என்று சொல்கின்றனர். இயேசுவை [குமாரனாகிய] தேவன் என்று சொல்வதில்லை; அவரை ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்கின்றனர். ஆனால் இயேசு ஒரு கன்னிகையிடத்தில் பிறந்தார், மரித்தோரை உயிர்ப்பித்தார் என்று அவர்கள் வேதத்தில் இருந்தாலும் அவர் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், அவர் தேவன் அல்ல என்றும் சொல்கின்றனர்.
மொசாப் ஹசான் யூசுஃப் (Mosab Hassan Yousef) என்பவர் சொல்லும்போது, "தங்களது இஸ்லாமிய நம்பிக்கையைச் சார்ந்தவர்கள் அல்லாதவர்களை கொல்லுங்கள் என்று அவர்களின் வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. முகமது என்ற ஒழுங்கு நெறியற்ற ஒருவரை, பலரை கொலை செய்தவரை தங்களுக்கு முன்மாதிரியாக வைத்துக்கொண்டுள்ளனர்" என்று சொல்கிறார்" [2].



மேலும், இவர்: "இஸ்லாமியர்கள் எனக்கு விரோதிகள் அல்ல, அவர்களுடைய நபியும், அவர்களின் இரட்டை வேடம் உடைய கடவுளும்தான்" என்கிறார்.
கிறிஸ்தவ சமயத்தில் தேவன் ஒருவரே, அவர் திரித்துவ தேவன் (Trinity) என்று கூறப்படுகின்றது; மேலும் குமாரனாகிய தேவன் பூமியில் மனிதனாக வந்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்கிறது. மேலும் கொலை செய்யாதிருப்பாயாக, உங்கள் சத்துருக்களை நேசியுங்கள், தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்று பைபிளில் இருக்கின்றது; இயேசு பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளையோ சிநேகிக்கிறார்; "நீ உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்று இயேசு சொல்லியிருக்கிறார். பிறர் எனப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சரி. விதிவிலக்கு ஏதும் இல்லை.[3]



புத்தமதத்தில் உயிர்களை கொல்லாதே என்று சொல்லப்பட்டாலும், கடவுள் இல்லை என்ற அடிப்படையை உடைய மதமாகும். புத்த மதத்தின் வேதத்தில்: சிருஷ்டிகர் (C
reator) என்று ஒருவர் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலகம் உண்டாக்கப்பட்டது, அதின் ஜீவராசிகள் எல்லாம் உண்டாக்கப்பட்டன என்பது எல்லாம் குப்பை என்கிறது[4]. புத்தர் இந்து மதத்தை ஏற்கமறுத்தவர்; இந்துக்களின் வேதங்களை தள்ளிவிட்டவர்; மோசேயினால் பெறப்பட்டவகைளை ஒதுக்கி தள்ளியவர். என்றால் எப்படி எல்லா கடவுளும் ஒரே கடவுளாக முடியும்?



இப்படியிருக்க எல்லாரும் ஒரே தேவனை வணங்குகிறோம் என்று எப்படி சொல்லமுடியும்? எல்லாரும் ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களுடைய வேதங்களை கொண்டுவந்து ஆதாரம் காட்டசொல்லுங்கள்.


மேலும்:
- நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். மேலும் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். இதில் வேறு வழியில்லை என்றாகிறது அல்லவா?
- நம்முடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தியவர் இயேசு ஒருவரே. (இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை) சிலுவையில் மரித்து உயிருடன் எழும்பி பின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் ஒருவரே.
- அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை."
- யோவான் சொல்லும்போது: "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் [நித்திய] ஜீவன் இல்லாதவன்."

ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களின் சில கொள்கைகள் அல்ல அனைத்து கொள்கைகளும் ஒன்றாகவே இருக்கவேண்டும். கொள்கைகள் மாறுபட்டால், பாதை மாறுபடும்; பாதைமாறினால் செல்லும் இடம் மாறும். எங்கே செல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம்!

Comments